தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி
சிங்கை:
ஆலங்குளம் டி.டி.டி.ஏ. பாடசாலை தெருவை சேர்ந்தவர் ரமேஷ். கூலித்தொழிலாளி. இவரது மனைவி பேச்சியம்மாள். இவர்களது மகன் இசைவாணன்(வயது16). இவன் நல்லூர் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் நேற்று ஆடிஅமாவாசை திருவிழாவை முன்னிட்டு குடும்பத்துடன் இவர்கள் அனைவரும் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர்.
அப்போது இசைவாணன் குளிப்பதற்காக கோவில் முன்புள்ள தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் குளிக்க சென்றான். வெகு நேரமாகியும் அவன் வராததால் சந்தேகமடைந்த மாணவனின் பெற்றோர் அங்கு தேடியும் கிடைக்கவில்லை. உடனடியாக இது குறித்து கல்லிடைகுறிச்சி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இந்நிலையில் மாணவனின் உடல் இன்று காலை காணிக்குடியிருப்பு பகுதியில் கரை ஒதுங்கியது. சிங்கை போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இசைவாணனுக்கு நீச்சல் தெரியும் என்று கூறப்படுகிறது. எனவே எப்படி இறந்தான் என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.