செய்திகள்

திருநாவுகரகசர் தலைமையில் காங்கிரஸ் புதிய மாவட்ட தலைவர்கள் கூட்டம்

Published On 2017-06-21 09:22 GMT   |   Update On 2017-06-21 09:22 GMT
திருநாவுகரகசர் தலைமையில் புதிய காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. இதில் இளங்கோவன் ஆதரவு மாவட்ட தலைவர்கள் 13 பேர் பங்கேற்வில்லை.
சென்னை:

தமிழக காங்கிரசுக்கு 72 மாவட்ட தலைவர்கள் சமீபத்தில் நியமிக்கப்பட்டனர். ஏற்கனவே பதவியில் இருந்த இளங்கோவன் ஆதரவு மாவட்ட தலைவர்கள் 22 பேர் மாற்றப்பட்டனர். அதற்கு பதிலாக இளங்கோவன் ஆதரவாளர்கள் 13 பேருக்கு மாவட்ட தலைவர் பதவி வழங்கப்பட்டது.

இந்த மாவட்ட தலைவர்கள் மாற்றத்துக்கு இளங்கோவன் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதை கண்டித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூரில் உண்ணாவிரதமும் இருந்தனர்.

இந்த நிலையில் இன்று காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் புதிய மாவட்ட தலைவர்கள் அறிமுகம் ஆகியவற்றுக்காக இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாநில தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். குமரி அனந்தன், கிருஷ்ணசாமி, தங்கபாலு, செல்வ பெருந்தகை, வசந்த குமார் எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், வீரபாண்டியன், எம்.எஸ்.திரவியம், சிவராஜசேகர், ரூபி மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தை இளங்கோவன் ஆதரவு மாவட்ட தலைவர்கள் புறக்கணித்தனர். மதுரை, திண்டுக்கல், பெரம்பலூர், ஈரோடு, திருப்பூர், வேலூர், சேலம், கரூர், திருவள்ளூர், செங்கம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட தலைவர்கள் 13 பேர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
Tags:    

Similar News