செய்திகள்

அம்மாப்பேட்டையில் விசைத்தறி உரிமையாளர் வீட்டில் 24 பவுன் நகை கொள்ளை

Published On 2017-06-20 16:21 GMT   |   Update On 2017-06-20 16:21 GMT
விசைத்தறி உரிமையாளர் வீட்டில் 24 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொண்டலாம்பட்டி:

சேலம் அம்மாப்பேட்டை, பெரியார் நகர் வைத்தி உடையார்காடு பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 55). இவர் அந்த பகுதியில் விசைத்தறிக் கூடம் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் சென்னையில் வசித்து வரும் தனது மகளை பார்ப்பதற்காக கடந்த மாதம் 20-ந்தேதி சென்னை சென்றார். பின்னர் நேற்று முன்தினம் வீட்டிற்கு திரும்பியபோது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் வீடு முழுவதும் சிதறி கிடந்தது.

மேலும் பீரோவில் இருந்த 23½ பவுன் தங்க நகையும் மாயமாகி இருந்தது. இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த அவர், தான் வீட்டில் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் வீடு புகுந்து கொள்ளை அடித்து சென்றதை உணர்ந்தார்.

பின்னர் குணசேகரன் இந்த சம்பவம் குறித்து அம்மாப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

இதனை தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகி கொள்ளை யர்களின் கைரேகைகளை பதிவு செய்து பழைய கொள்ளையர்களுடன் ஒப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தனர்.

மேலும் ஆள் இல்லாத நேரத்தில் வீடு புகுந்து கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News