செய்திகள்

புதுவையில் ஆயுதங்கள் வைத்திருந்ததாக 5 பேர் கைது

Published On 2017-06-14 09:36 GMT   |   Update On 2017-06-14 09:36 GMT
புதுவையில் ஆயுதங்கள் வைத்திருந்ததாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி:

புதுவை லாஸ்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன் நேற்று இரவு போலீசாருடன் ரோந்து சென்றார். அப்போது சேத்திலால் நகர் 2-வது குறுக்கு தெருவில் சென்ற போது அங்குள்ள பொதுக்கழிப்பிடம் பகுதியில் 4 பேர் மறைவாக பதுங்கி இருந்தனர்.

அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் கத்தி போன்ற ஆயுதங்கள் இருந்தன. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

அப்போது அவர்கள் சேத்திலால் நகரை சேர்ந்த சுரேஷ் (வயது 19), தினேஷ்பாபு (27), மாணிக்கம் (28), மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செந்தில்குமார் (27) என்பது தெரியவந்தது. இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது என்பதும், 4 பேரும் ரவுடி சுந்தரின் நண்பர்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் அவர்கள் மீது ஆயுதம் வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இதேபோல் உருளையன்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் நேற்று இரவு ரோந்து சென்றனர். அப்போது திடீர் நகர் பகுதியில் ஒருவர் போலீசாரை கண்டதும் ஓடினார். அவரை பிடித்து சோதனை செய்ததில் அவர் கத்தி வைத்திருந்தார். அவரிடம் விசாரித்ததில் அவரது பெயர் ஸ்ரீதர் (29) என்பது திடீர் நகரை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்மீது ஆயுதம் வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஸ்ரீதர் மீது கொலை, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News