செய்திகள்

குழுவின் தலைவர் மட்டுமே இனி பேச்சுவார்த்தை நடத்துவார்: செங்கோட்டையன்

Published On 2017-04-27 06:49 GMT   |   Update On 2017-04-27 07:05 GMT
மாறி மாறி கருத்துக்களை கூறுவதால் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகின்றன. அதனால் எங்கள் அணியின் குழு தலைவர் வைத்திலிங்கம் மட்டுமே இனி பேச்சுவார்த்தை நடத்துவார் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
சென்னை:

சர்.பிட்டி தியாகராயர் 166-வது பிறந்த நாள் விழா அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. சென்னை மாநகராட்சி வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

அமைச்சர்கள் செங்கோட்டையன், டி.ஜெயக்குமார், வேலுமணி, பா.பென்ஜமின், கடம்பூர் ராஜூ, மற்றும் எஸ்.ஆர். விஜயகுமார் எம்.பி. வட சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் நா.பாலகங்கா, மாநகராட்சி கமி‌ஷனர் கார்த்திகேயன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

பின்னர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இரு அணிகள் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமைக்கப்பட்ட குழுவில் இடம் பெற்றவர்கள் மாறி மாறி கருத்துக்களை கூறி வருகிறார்கள். இதனால் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகின்றன. அதனால் எங்கள் அணியின் குழு தலைவர் வைத்திலிங்கம் மட்டுமே இனி பேச்சு வார்த்தை நடத்துவார்.


கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து காவல்துறை நடவடிக்கையை முடுக்கியுள்ளது.

விசாரணை முடிவில் உண்மையான குற்றவாளி யார் என்பது தெரிய வரும். சட்டசபையை கூட்டுவது குறித்து உரிய முடிவு எடுக்கப்படும். இரு அணிகளும் இணைவதற்கான முயற்சியில் ஈடுபடுவதால் அரசு பணிகள் முடங்குவதாக கூறுவது தவறு. தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிதித்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறுகையில், இருஅணிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சுமூகமான சூழல் ஏற்பட்டுள்ளது.

ஓ.பன்னீர் செல்வம் அணியினர் எப்போது வந்தாலும் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயார். இன்று மாலையில் கூட தலைமை கழகத்திற்கு அவர்கள் வரலாம்.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Similar News