சோளிங்கர் அருகே கல்லூரி மாணவர் காருடன் கிணற்றில் விழுந்து பலி
சோளிங்கர்:
சோளிங்கர் பஸ் நிலையம் அருகே வசிப்பவர் செந்தில் குமார். இவரது மகன் சாமுவேல் (வயது 20). இவர் திருத்தணியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.
இவர் நேற்று அங்குள்ள ஒரு தோட்ட பகுதியில் காரை நிறுத்தி விட்டு நண்பர்களுடன் இருந்தார்.
பின்னர் காரை எடுக்க சாமுவேல் சென்றார். அப்போது, திடீர் என காரை ஸ்டாட் செய்த அவர் காரை பின் நோக்கி ஓட்டியுள்ளார்.
அப்போது பின்பக்கம் இருந்த கிணற்றில் கார் கவிழ்ந்தது. இதை பார்த்த நண்பர்கள் அவரை மீட்க முயன்றனர். இவர்களது சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் விரைந்து வந்து சாமுவேலை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை இதை பார்த்த நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் ஆர்.கே.பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் அங்கு வந்த போலீசார் சாமுவேல் உடலை காருடன் மீட்டனர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.