செய்திகள்

மருத்துவ மேற்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு கேட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் தர்ணா போராட்டம்

Published On 2017-04-26 09:21 GMT   |   Update On 2017-04-26 09:21 GMT
ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ மேற்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு கேட்டு டாக்டர்கள் தர்ணா போராட்டம் ஈடுபட்டதால் சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் கடும் அவதி அடைந்தனர்.
ராயபுரம்:

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும், அரசு ஆஸ்பத்திரியில் 2 ஆண்டுகள் பணியாற்றிய டாக்டர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 50 சதவீத மாநில இடஒதுக்கீட்டுக்கு ஐகோர்ட்டு விதித்த தடையை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் கடந்த ஒரு வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகம் முழுவதும் டாக்டர்கள் போராட்டம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் இன்று சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆஸ்பத்திரி டீன் அலுவலகம் அருகே சாமியானா பந்தல் அமைத்து அமர்ந்து உள்ளனர். டாக்டர்களின் இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் மருத்துவ பேராசிரியர்கள் டாக்டர்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

டாக்டர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மருத்துவ மாணவ- மாணவிகளும் ஏராளமானோர் பங்கேற்றனர். இதனால் ஆஸ்பத்திரிக்கு வந்த நோயாளிகள் உரிய சிகிச்சை பெற முடியாமல் அவதி அடைந்தனர்.

Similar News