செய்திகள்

திசையன்விளை அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

Published On 2017-04-25 10:14 GMT   |   Update On 2017-04-25 10:14 GMT
திசையன்விளை அருகே இன்று குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திசையன்விளை:

திசையன்விளை- நாங்குநேரி சாலையில் வாழைத்தோட்டம் என்ற கிராமம் உள்ளது. இங்கு கடந்த 10 நாட்களாக குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து அப்பகுதி கிராம மக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து இருந்தனர். ஆனால் இதுவரை குடிநீர் பிரச்சினையை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் வாழைத் தோட்டம் கிராம மக்கள் ஆண்கள், பெண்கள் என சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை காலி குடங்களுடன் திசையன்விளை- நாங்குநேரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி கோ‌ஷம் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திசையன்விளை போலீசார் விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 1 மணி நேரம் பேச்சுவார்த்தைக்கு பின்பு மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. கிராம மக்களின் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News