அய்யலூர் பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் தக்காளிக்கென்று தனியாக சந்தை இயங்கி வருகிறது. அய்யலூர், வடமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டுள்ள தக்காளிகளை இங்கு விற்பனைக்கு கொண்டு வருவர். இங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு தக்காளி ஏற்று மதி செய்யப்படுகிறது.
தற்போது வறட்சி காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் குறைந்த அளவே தக்காளி சந்தைக்கு வருகிறது.
வரத்து குறைந்தபோதும் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கூலி ஆட்களுக்கு செலவு செய்த பணம் கூட எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். ஆந்திர மாநிலத்தில் இருந்து தக்காளி இறக்குமதி செய்யப்படுவதால் உள்ளூர் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். லாபம் கிடைக்காத போதும் தக்காளியை வீண் அடிக்க விரும்பாமல் கிடைக்கிற விலைக்கே கொடுத்து விட்டு செல்கின்றனர்.
கடந்த வாரம் 14 கிலோ எடை கொண்ட பெட்டி தக்காளி ரூ.230 வரை விற்பனையானது. ஆனால் தற்போது 100-ல் இருந்து 130 வரை மட்டுமே விற்பனையாகிறது.