செய்திகள்

மதுக்கடை முன்பு பெண்கள் முற்றுகை: 200 பேர் கைது

Published On 2017-04-24 10:12 GMT   |   Update On 2017-04-24 10:12 GMT
தண்டையார்பேட்டை பஸ் டெப்போவில் இருந்து மதுக்கடையை அகற்றகோரி சுத்தியலுடன் பெண்கள் உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்த அவர்களை போலீசார் கைது செய்தனர்.
ராயபுரம்:

புதுவண்ணாரப்பேட்டை, சேனியம்மன்கோவில் 1-வது தெருவில் மதுக்கடை உள்ளது. இந்த மதுக்கடையை அகற்ற அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில் இன்று மதியம் அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்டோர் மதுக்கடையை அகற்றகோரி தண்டையார்பேட்டை பஸ் டெப்போவில் இருந்து சுத்தியலுடன் ஊர்வலமாக வந்தனர். கையில் மதுவுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் வைத்து இருந்தனர்.

அவர்கள் மதுவுக்கு எதிராக கோ‌ஷமிட்டபடி மதுக்கடையை முற்றுகையிட்டனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் மதிவாணன், பகுதி செயலாளர் செந்தில்குமார் உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆவேசம் அடைந்த போராட்டக்காரர்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேரை போலீசார் கைது செய்தனர். ஆனாலும் இன்னும் ஏராளமானோர் மதுக்கடையை திறக்கக்கூடாது என்று கூறி தொடர்ந்து அங்கு திரண்டு உள்ளனர். பதட்டமான நிலை உள்ளதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

Similar News