மேலும் 2 நாட்களுக்கு வெப்பம் நீடிக்கும்: முன்னாள் வானிலை இயக்குனர் ரமணன் தகவல்
சென்னையில்:
சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெப்பம் குறித்து முன்னாள் வானிலை இயக்குனர் ரமணன் கூறியதாவது:-
கடல் காற்று வீசுவதைப் பொறுத்தே சென்னையில் வெப்பத்தின் அளவில் ஏற்றம்-இறக்கம் ஏற்படுகிறது. காலை 10.30 மணிக்கு கடல்காற்று வீசத் தொடங்கினால் வெப்பத்தின் தாக்கம் குறையும். ஆனால் கோடை காலத்தில் மதியத்துக்கு மேல் தான் கடல் காற்று வீசத்தொடங்குகிறது. வெப்பம் நிறைந்த தரைக் காற்றின் வேகம் குறைந்த பின்னரே கடல் காற்று வீசத் தொடங்குகிறது. தற்போது கடல் காற்று தாமதமாக வீசுவதால் வெப்பம் அதிகரித்து உள்ளது. இது மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையில் மாலையில் கடல் காற்று வீசுவதால் வெப்பம் குறையத் தொடங்குகிறது. என்றாலும் வீடுகளில் புழுக்கம் அதிகரித்து இருப்பதால் மக்கள் கடற்கரையிலும், திறந்த வெளியிலும், பூங்காக்களிலும் காற்று வாங்க அதிகம் திரளுகிறார்கள். நீச்சல் குளங்களைத் தேடி இளைஞர்கள் செல்கிறார்கள்.
பள்ளிக்கு நேற்று முதல் கோடை விடுமுறை விடப்பட்டதால் இனிவரும் நாட்களில் கூட்டம் அதிகரிக்கும்.