செய்திகள்

உயிரிழந்த 14 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் உதவி: முதலமைச்சர் உத்தரவு

Published On 2017-04-20 08:26 GMT   |   Update On 2017-04-20 08:26 GMT
பல்வேறு துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 14 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

விழுப்புரம் கருவேப்பிலை பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மற்றும் வானூர் எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார், தூத்துக்குடி தெர்மல் நகரைச் சேர்ந்த விக்னேஷ், வேலூர் சாத்துமதுரை கிராமத்தைச் சேர்ந்த நரசிம்மராஜி,

கோவை எஸ். அய்யம்பாளையத்தைச் சேர்ந்த சம்பு மற்றும் குருடம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராமு, தஞ்சாவூர் குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சாந்தி, உசிலம்பட்டி, கருக்கட்டான் பட்டியைச் சேர்ந்த கண்ணகி ஆகியோர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தனர்.

சென்னை ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்த இதய கிருஷ்ணன்; குமரன் நகர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த சையது ஆசாத், செங்குன்றம் காவல் நிலையத்தில், தலைமைக் காவலராகப் பணிபுரிந்த முருகன், கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில், உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த சார்லஸ், ஸ்டான்லி மருத்துவமனை காவல் நிலையத்தில், சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த ஜெயவர்தன் மற்றும் நவீன காவல் கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த சத்திய நாராயணன் ஆகிய காவலர்கள் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 14 நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Similar News