புதுவையில் டைப்ரைட்டிங் சென்ற மாணவி மாயம்
புதுச்சேரி:
புதுவை அரியாங்குப்பம் மணவெளி நேத்தாஜிநகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சந்திரசேகரன் இவரது மகள் மகேஸ்வரி (வயது15) இவர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிவிட்டு அரியாங்குப்பம் திரவுபதி அம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு தனியார் டைப்ரைட்டிங் சென்டரில் டைப்ரைட்டிங் பழகி வந்தார்.
சம்பவத்தன்று டைப்ரைட்டிங் சென்டருக்கு சென்று வருவதாக மகேஸ்வரி சைக்கிளில் புறப்பட்டு சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் டைப்ரைட்டிங் சென்டருக்கு சென்று விசாரித்தனர். அப்போது மகேஸ்வரி டைப்ரைட்டிங் சென்டருக்கு வரவில்லை என்பது தெரியவந்தது.
உறவினர் மற்றும் தோழிகள் வீடுகளில் தேடியும் எங்கும் மகேஸ்வரி இல்லை. இதையடுத்து சந்திரசேகரன் தனது மகள் மாயமானது குறித்து அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாணவியை தேடிவருகிறார்கள்.