குடும்ப தகராறில் செல்போன் கடைக்காரர் தூக்குபோட்டு தற்கொலை
புதுச்சேரி:
புதுவை தருமாபுரி தண்ணீர் தொட்டி வீதியை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது32). இவரது மனைவி மீனாட்சி (30). இவர்களுக்கு திருமணமாகி 4 வருடம் ஆகிறது. 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து செல்போன் மற்றும் சிம்கார்டு விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தனர்.
சமீப காலமாக கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது. நேற்று அதுபோல் அவர்களிடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. அப்போது மனமுடைந்த அண்ணாமலை மனைவி வெளியே சென்று இருந்த நிலையில் வீட்டின் மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தொங்கினார். சிறிது நேரம் கழித்து மீனாட்சி வீட்டுக்கு வந்த போது கணவர் தூக்குபோட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் இருந்து அண்ணாமலையை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அணணாமலை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.