செய்திகள்

வாடிப்பட்டியில் பால் வாங்க சென்ற மூதாட்டியிடம் 9 பவுன் நகை பறிப்பு

Published On 2017-04-08 10:41 GMT   |   Update On 2017-04-08 10:41 GMT
வாடிப்பட்டியில் பால் வாங்க சென்ற மூதாட்டியிடம் பட்டபகலில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 ஆசாமிகள் கழுத்தில் இருந்த 9 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு சென்றனர்.

வாடிப்பட்டி:

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி கள்ளர்மடம் எதிரில் குடியிருந்து வருபவர் முத்துசாமி(வயது 70) ஓய்வு பெற்ற ராணுவவீரர். இவர் வீட்டையொட்டி பெட்டிக்கடைவைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயம் (வயது 65) இவர் நேற்று மாலை 5மணிக்கு ராமநாயக்கன்பட்டி பால் பண்ணையிலிருந்து பால் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது மதுரை திண்டுக்கல் நகர்புற சாலையில் 25வயது மதிக்கதக்க 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் பின்புறமாக வந்து ஜெயம் கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தங்க செயினை பறித்தனர்.

உடனே சுதாரித்துக்கொண்ட ஜெயம் கழுத்திலிருந்த செயினின் ஒரு பகுதியை இருக்க பிடித்துக் கொள்ள அதன் மற்றொரு பகுதியை அவர்கள் பறித்தனர். ஜெயம் அய்யோ அம்மா என்று கூச்சல் போட அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் ஓடி வந்தனர்.

அதற்குள் அந்த மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் மாயமாய் மறைந்தனர்.

இது சம்மந்தமாக வாடிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

Similar News