செய்திகள்

திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

Published On 2017-04-05 15:09 GMT   |   Update On 2017-04-05 15:09 GMT
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் வாங்கிய சிறு, குறு விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய கோரி காங்கிரசார் திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சேதராப்பட்டு:

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக காங்கிரசார் அறிவித்து இருந்தனர்.

இதையடுத்து காங்கிரசார் திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் கூடினர். மாவட்ட நிர்வாகி பாபு சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வானுரை சேர்ந்த ஏழுமலை, காசிநாதன், விஜய ரங்கன், முன்னாள் மாநில செயலாளர் சிறுவை ராமமூர்த்தி, மாவட்ட செயலாளர் மதியழகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் வாங்கிய சிறு, குறு விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும், உயிர் இழந்த விவசாயிகளுக்கு அரசு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Similar News