செய்திகள்

தேன்கனிக்கோட்டை அருகே கரடி பிடியில் இருந்து தப்பி ஓடிய விவசாயி

Published On 2017-03-26 12:52 GMT   |   Update On 2017-03-26 12:52 GMT
தேன்கனிக்கோட்டை அருகே புதரில் மறைந்திருந்த கரடி ஒன்று வெளியே வந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயி பதறி அடித்து கொண்டு தப்பி ஓடினார்.

தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், காப்புகாடு சாப்ராங்கனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் விவசாயி. இவர் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீமதி என்பவர் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் நிலத்தில் பயிரிட்டுள்ள பயிர்களை காட்டு விலங்குள் தினமும் நாசம் செய்து அட்டகாசம் செய்து வந்தது. மேலும் காட்டு யானைகள் போன்ற வனவிலங்குகள் பயிர்களை நாசம் செய்யாமல் இருக்க தினமும் அவர் காவலுக்கு இருந்து வந்தார்.

இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று இரவு சீனிவாசன் தோட்டத்துக்கு காவலுக்கு சென்றார். அப்போது திடீரென புதரில் மறைந்தி இருந்த கரடி ஒன்று வெளியே வந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் பதறி அடித்து கொண்டு தப்பி ஓடினார்.

அப்போது அவரை அந்த கரடி பினதொடர்ந்து துரத்தி கொண்டு வந்தது. அந்த கரடியிடம் இருந்து பிடிபடாமல் அவர் முள்ளி லும் கல்லிலும் விழுந்து தப்பி ஓடி வந்துள்ளார். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

வழக்கமாக காட்டு யானைகள் தான் அந்த பகுதிகளில் பயிர்களை நாசம் செய்தும், பொதுமக்கள் அச்சுறுத்தியும் வந்த நிலையில் கரடிகளும் ஊருக்குள் புகுந்ததால் அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்து உள்ளனர். இதுபோன்று ஜார்காலட்டி என்ற பகுதியிலும் பொதுமக்கள் கரடியை பார்த்துள்ளனர்.

இதுகுறித்து தேன்கனிக்கோட்டை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த தேன்கனிக்கோட்டை வனசரகர் ஆறுமுகம், வன காப்பாளர் முனிராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு கரடியின் தடயங்களை சேகரித்தனர்.

வன ஊழியர்களிடம் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வனவிலங்குகளை கண்காணிக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும் கிராம மக்கள் பார்த்ததாக கூறும் கரடியை பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News