செய்திகள்

தாம்பரம், ஆவடி, பல்லாவரம் மாநகராட்சியாக மாறுகிறது: தமிழக அரசு

Published On 2017-03-26 05:03 GMT   |   Update On 2017-03-26 05:03 GMT
தாம்பரம், ஆவடி, பல்லாவரம் ஆகியவற்றை மாநகராட்சியாக மாற்ற தமிழக அரசு திட்ட மிட்டு உள்ளது. இதனால் விரைவில் இந்த 3 நகராட்சிகளும், மாநகராட்சியாக மாறுகிறது.

சென்னை:

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, தூத்துக்குடி, திருப்பூர், ஈரோடு, வேலூர், தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய 12 மாநகராட்சிகள் உள்ளன.

சென்னை பெருநகர மாநகராட்சியில் 200 வார்டுகள் உள்ளன.

இந்த நிலையில் நகராட்சிகளாக இருக்கும் தாம்பரம், ஆவடி, பல்லாவரம் ஆகியவற்றை மாநகராட்சியாக மாற்ற தமிழக அரசு திட்ட மிட்டு உள்ளது.

பல்லாவாரம், தாம்பரம், ஆவடி ஆகியவற்றை மாநகராட்சியாக மாற்றும் பரிந்துரையை மாவட்ட நிர்வாகம் தமிழக அரசுக்கு அனுப்பி வைத்து உள்ளது. மாவட்ட நிர்வாகம் அனுப்பிய இந்த பரிந்துரையை தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. இதனால் விரைவில் இந்த 3 நகராட்சிகளும், மாநகராட்சியாக மாறுகிறது. இதனால் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 15 ஆக உயரும்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறும் போது கடந்த சில வாரங்களுக்கு முன்பு நாங்கள் இந்த பரிந்துரையை அரசுக்கு அனுப்பி வைத்துள்ளோம். அரசு இது பற்றி பரிசீலனை செய்து வருகிறது என்றார்.

ஆவடி, பல்லாவரம், தாம்பரம் ஆகியவை மாநகராட்சியாக மாறும் போது குடிநீர், கழிவு நீர், மின்சாரம், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேம்படும். அதே நேரத்தில் சொத்து வரி, குடிநீர் வரி அதிகரிக்கும்.

மாநகராட்சியாக மாறும் ஆவடி, திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கிறது. ஆவடி மாநகராட்சியில் ஆவடி, பூந்தமல்லி, திருவேற்காடு ஆகிய நகராட்சிகளும், திருநின்றவூர், பேரூராட்சியும் இடம் பெறும்.


நெமிலிச்சேரி, நசரத்பேட்டை, காட்டுப்பாக்கம், அயபாக்கம், வானகரம் உள்பட 11 கிராம பஞ்சாயத்துக்கள் ஆவடி மாநகராட்சியில் வரும். மொத்த 148 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டது. மக்கள் தொகை 6.12 லட்சமாகும். இதில் 80 முதல் 100 வார்டுகள் வரலாம்.

தாம்பரம் மாநகராட்சியில் தாம்பரம், செம்பாக்கம் ஆகிய 2 நகராட்சிகளும், பெருங்களத்தூர், பீர்க்கன் கரணை, மாடம்பாக்கம், சிட்லபாக்கம் ஆகிய 4 பேரூராட்சிகளும் இடம் பெறும். மேடவாக்கம், முடிச்சூர், வரதராஜபுரம் உள்பட 7 கிராம பஞ்சாயத்துகளும் இடம் பெறும். காஞ்சீபுரம் மாவட்டதில் இந்த பகுதிகளில் வருகிறது.

பல்லாவரம் மாநகராட்சியில் அனகாபுத்தூர், பல்லாவரம், பம்மல் ஆகிய 3 நகராட்சிகளும், ஒரு கிராம பஞ்சாயத்தும் (கவுல்பஜார்) இடம் பெறும்.

இந்த திட்டத்தின்படி பேரூராட்சியாக இருக்கும் குன்றத்தூர், மாங்காடு கிளை நகராட்சியாக மேம்படும்.

Similar News