செய்திகள்

நாமக்கல் அருகே பட்டப்பகலில் பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு

Published On 2017-03-25 17:33 GMT   |   Update On 2017-03-25 17:33 GMT
நாமக்கல் அருகே, பட்டப்பகலில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள், பெண்ணிடம் 5 பவுன் நகையை பறித்துச் சென்றனர்.
நாமக்கல்:

நாமக்கல் அருகே உள்ள அய்யம்பாளையம் கிராமத்தில் மளிகைக் கடை நடத்தி வருபவர் சுப்பிரமணி (வயது 55). இவரது மனைவி குப்பாயி (50). இவர் நேற்று மளிகைக் கடையில் இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாலிபர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் அந்த கடைக்கு வந்தனர்.

அதில் ஒரு வாலிபர் வந்து குப்பாயிடம் தண்ணீர் பாக்கெட் கேட்டார். கடைக்குள் சென்று குப்பாயி தண்ணீர் பாக்கெட்டை எடுத்து வந்து அந்த வாலிபரிடம் கொடுத்தார். தண்ணீர் பாக்கெட்டை வாங்கி கொண்ட அந்த வாலிபர் திடீரென குப்பாயி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டார்.

பின்னர் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் இருவரும் தப்பிச்சென்று விட்டனர். இதில் அதிர்ச்சி அடைந்த குப்பாயி, இதுகுறித்து நல்லிபாளையம் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பட்டப்பகலில் பெண்ணிடம் நகை பறித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Similar News