சேதராப்பட்டு அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்: தனியார் தொழிற்சாலை மானேஜர் பலி
சேதராப்பட்டு:
கிருமாம்பாக்கம் அருகே பெரியகாட்டுகுப்பம் பள்ளிக்கூட வீதியை சேர்ந்தவர் ராஜரத்தினம். இவரது மகன் செந்தில்குமார் (வயது 37). இவர் சேதராப்பட்டு அருகே துத்திப்பட்டில் உள்ள தனியார் கெமிக்கல் தொழிற்சாலையில் மானேஜராக பணிபுரிந்து வந்தார்.
வழக்கம்போல் நேற்று மாலை பணி முடிந்து செந்தில்குமார் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார்.
துத்திப்பட்டில் உள்ள தனியார் இரும்பு தொழிற்சாலை அருகே வந்த போது அந்த வழியாக வந்த லாரி , மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.
இது குறித்த தகவலின் பேரில் வில்லியனூர் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற லாரி டிரைவரை தேடி வருகிறார்கள்.
லாரி மோதி இறந்த செந்தில்குமாருக்கு இந்திரா என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.