ஒரத்தநாட்டில் கூலிப்படையை ஏவி டாக்டர் கொலை: மகளிடம் போலீசார் விசாரணை
ஒரத்தநாடு:
தஞ்சை மாவட்டம் பாப்பாநாடு அருகே நெம்மேலி திப்பியக்குடியை சேர்ந்தவர் ராசப்பன் (வயது 69) டாக்டர். இவர் ஒரத்தநாட்டில் கிளினிக் நடத்தி வந்தார். இவரது மனைவி மணிமாலா, மகள்கள் தீபிகா, அம்பிகா, மகன் கோகுல் ஆகியோர் சென்னையில் தனியே வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் ராசப்பன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு கிளினிக்கிலிருந்து வீட்டிற்கு சென்றபோது மர்ம நபர்கள் அவரை கத்தியால் குத்தி கொலைசெய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், துணை போலீஸ் சூப்பிரண்டு செங்க மலகண்ணன், ஒரத்தநாடு இன்ஸ்பெக்டர் ஜெக தீஸ்வரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் ராசப்பனின் 2-வது மகள் தீபிகா (32) சென்னையில் பங்கு சந்தை சார்ந்த ஒரு நிறுவனத்தில் கம்ப்யூட்டர் பொறியாளராக பணியாற்றி வரும் இவர் போலியோவால் பாதிக்கப்பட்டு 2 கால்களும் செயல்பட முடியாத நிலையில் உள்ளார். அவர் வேலை பார்க்கும் இடத்தில் நாகையை சேர்ந்த ஒரு வாலிபர் நண்பராக பழகி வந்துள்ளார். அவரிடம் தீபிகா தனது தந்தை டாக்டராக இருந்தும் தங்களது குடும்பத்தை கவனிப்பதில்லை. நாங்கள் சென்னையில் வேலை பார்த்துக்கொண்டு வாடகை வீட்டில் வசித்து வருகிறோம் என்று கூறியதாக தெரிகிறது. அவரிடம் அந்த வாலிபர் உன் தந்தையை கொலை செய்து விடலாமா? என்று கேட்டுள்ளார். இதைத்தொடர்ந்து இருவரும் ராசப்பனை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.
அதன் பின்னர்தான் டாக்டர் ராசப்பன் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் தீபிகா தனது நண்பர் மூலம் கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து போலீசார் தீபிகாவிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள நாகையை சேர்ந்த வாலிபர் மற்றும் கூலிப்படையினர் இன்று மாலைக்குள் கைது செய்யப்படலாம் என போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
தந்தையை மகளே கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் ஒரத்தநாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.