செய்திகள்

தொப்பி அணிந்து டி.டி.வி.தினகரன் வீதி வீதியாக தேர்தல் பிரசாரம்

Published On 2017-03-24 10:45 GMT   |   Update On 2017-03-24 10:45 GMT
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க. அம்மா வேட்பாளர் டி.டி.வி.தினகரன் தொப்பி அணிந்து வீதி வீதியாக தேர்தல் பிரசாரம் செய்தார்.
சென்னை:

ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் தேர்தல் பிரசாரத்தை நேற்று மாலையில் தொடங்கினார். தண்டையார் பேட்டை ஏ.இ.கோவிலில் உள்ள பெருமாள் கோவிக்கு சாமி தரிசனம் செய்து பிரசாரம் மேற்கொண்டார்.

தேர்தல் ஆணையம் ஒதுக்கிய சின்னமான ‘தொப்பி’ அணிந்து பிரசார வாகனத்தில் வீதி வீதியாக வாக்கு சேகரித்தார். மங்களம் தோட்டம், நாகூரான் தோட்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் ஜீப், ஆட்டோக்களில் சென்று வாக்கு சேகரித்தார். அவருடன் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், வாரிய தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

புதுவண்ணாரப்பேட்டை சாய்பாபா கோவிலில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்ட அவர் அங்கு நின்ற பக்தர்களிடம் ‘தொப்பி’ சின்னத்திற்கு ஆதரவு கேட்டார்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா விட்டுச் சென்ற மக்கள் நலத்திட்டப் பணிகள் தொடர்ந்து நடைபெறவும், மேலும் பல புதிய திட்டங்கள் இத்தொகுதி மக்களுக்கு கொண்டு வரவும், ‘தொப்பி’ சின்னத்திற்கு வாக்களிக்கும்படி வேட்பாளர் டி.டி.வி.தினகரன் பிரசாரம் செய்தார். பிரசார வாகனங்கள் செல்ல முடியாத குறுகிய தெருக்களில் டி.டி.வி. தினகரன் நடந்து சென்று தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். நேற்று இரவு 10 மணி வரை அவர் வாக்காளர்களை சந்தித்தார். பிரசாரத்தின்போது வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் பி.வெற்றிவேல், அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, மாவட்ட செயலாளர் பாலகங்கா உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் சென்றனர்.

Similar News