செய்திகள்

மர்ம காய்ச்சலால் தாய் இறந்த 2 வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு மகள் பலி

Published On 2017-03-20 09:46 GMT   |   Update On 2017-03-20 09:46 GMT
மேட்டுப்பாளையம் அருகே மர்ம காய்ச்சலால் தாய் இறந்த 2 வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு மகள் பலியான சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை:

கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இதுவரை பன்றி காய்ச்சலுக்கு 27 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பன்றி காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் மேட்டுப்பாளையம் அருகே உள்ள மின்சார வாரிய காலனியை சேர்ந்தவர் பேபி என்கிற ரதிதேவி (வயது 57). இவர் கடந்த சில நாட்களாக தீராத காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.

இதற்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது ரத்த மாதிரியை சோதனை செய்த போது ரதிதேவிக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ரதிதேவி கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று ரதிதேவி பரிதாபமாக இறந்தார். இதன் மூலம் பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

இவரது தாய் ருக்குமணி கடந்த 2 வாரங்களுக்கு மர்மகாய்ச்சல் பாதிப்பு காரணமாக இறந்துள்ளார். தற்போது ரதிதேவி இறந்ததால் மின்சார வாரிய காலனி மக்களிடையே பன்றி காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ளது.

எனவே மக்களின் பீதியை போக்கும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Similar News