செய்திகள்

கல்குவாரி விபத்தில் பலியான 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க தி.மு.க. வலியுறுத்தல்

Published On 2017-03-20 08:20 GMT   |   Update On 2017-03-20 08:20 GMT
கோவை மாவட்டத்தில் கல்குவாரி விபத்தில் பலியான 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்று சட்டசபையில் தி.மு.க. வலியுறுத்தி உள்ளது.
சென்னை:

சட்டசபையில் இன்று தி.மு.க. கொறடா சக்கரபாணி ஒரு கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசியதாவது:-

கடந்த 3 தினங்களுக்கு முன்பு கோவை மாவட்டத்தில் ஒரு குவாரியில் நடந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்து விட்டனர். இவர்கள் இருவரும் எனது ஒட்டன்சத்திரம் தொகுதியை சேர்ந்தவர்கள்.

இறந்த சக்திவேல், பாலன் என்ற இருவரது குடும்பத்திற்கும் தமிழக அரசின் சார்பாக தலா ரூ.10 லட்சம் உதவித் தொகை வழங்க வேண்டும். 2 குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும் அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்றார்.

இதற்கு அமைச்சர் எம்.சி. சம்பத் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

கோவை மாவட்டம் சூலூர் ஆச்சாபாளையத்தில் உள்ள கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் குவாரி மேல் பகுதியில் இருந்து பாறாங்கல் உருண்டு விழுந்ததில் அங்கு வேலை பார்த்த சக்திவேல், பாலன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இறந்து விட்டனர்.

கல்குவாரி விபத்து குறித்து மாவட்ட கலெக்டர் உரிய விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

கடந்த 18-ந்தேதியில் இருந்து குவாரி பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எனவே இதில் அறிக்கை கிடைக்கப்பெற்றதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இதில் தேவையான நிவாரணங்களை வழங்க முதல்- அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News