செய்திகள்

தாராபுரம் அருகே மாமியாரை கத்தியால் குத்திக்கொன்ற மருமகன் கைது

Published On 2017-03-16 10:47 GMT   |   Update On 2017-03-16 10:47 GMT
தாராபுரம் அருகே குடும்ப தகராறில் மாமியாரை கத்தியால் குத்திக்கொன்ற மருமகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாராபுரம்:

தாராபுரம் அருகே பெரமியம் லக்கமநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 35). இவரது மனைவி செல்வி (23). இவர்களுக்கு ஷெரின் (8), செல்வராஜ் (5) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

செல்லமுத்து அப்பகுதியில் உள்ள கோழி பண்ணையில் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று செல்லமுத்து மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவி செல்வியிடம் தகராறு செய்தார்.

இதனால் செல்வி கோபித்து கொண்டு தனது மகன்களுடன் பொன்னாபுரத்தில் உள்ள தாய் அருக்காணி (50) வீட்டுக்கு சென்றார்.

இதனால் ஆத்திரம் அடைந்த செல்லமுத்து மாமியார் அருக்காணி வீட்டுக்கு நேற்று மாலை சென்றார். அப்போது மனைவி செல்வியிடம் வீட்டுக்கு வரும்படி கூறினார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து சத்தம் போட்டார்.

அப்போது மாமியார் அருக்காணி வந்து செல்லமுத்துவை திட்டியதாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த செல்லமுத்து கத்தியால் அருக்காணியை குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். படுகாயம் அடைந்த அருக்காணியை தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்லமுத்துவை கைது செய்தனர்.

Similar News