செய்திகள்
கொதிக்கும் பால் கொட்டி 10 மாத குழந்தை பலி
கரையாம்புத்தூர் அருகே கொதிக்கும் பால் கொட்டி 10 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
பாகூர்:
கரையாம்புத்தூர் அருகே உள்ள கடுவனூரை சேர்ந்தவர் ராஜவேலு. லாரி டிரைவர். இவரது மனைவி வினோதினி. இவர்களுக்கு ஏற்கனவே ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர்.
3-வதாக ஜீவா என்ற குழந்தை இருந்தது. 10 மாதம் ஆகியிருந்த இந்த குழந்தை வீட்டில் தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தது.
தாயார் வினோதினி தனது குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக பால் காய்ச்சி வைத்திருந்தார். கொதிக்கும் நிலையில் இருந்த அந்த பாலை கீழே இறக்கி வைத்துவிட்டு வெளியே சென்றார்.
அப்போது குழந்தை ஜீவா தவழ்ந்து வந்து அந்த பாலை இழுத்து தன் மீது கொட்டியது. இதில் உடல் வெந்து கதறிய அந்த குழந்தையை புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்துவிட்டது. கரையாம்புத்தூர் போலீசார் இதுபற்றி விசாரித்து வருகிறார்கள்.