செய்திகள்

இலங்கை சிறையில் சரியான உணவு தராமல் சித்ரவதை செய்தனர்: தமிழக மீனவர்கள்

Published On 2017-03-15 06:01 GMT   |   Update On 2017-03-15 06:01 GMT
இலங்கை ஜெயிலில் எங்களுக்கு சரியான உணவு தரவில்லை. அதிகமாக நாங்கள் சித்ரவதை செய்யப்பட்டோம் என்று விடுதலையான தமிழக மீனவர்கள் கூறினர்.
காரைக்கால்:

ராமநாதபுரத்தை சேர்ந்த 38 பேர் புதுக்கோட்டையை சேர்ந்த 30 பேர் நாகப்பட்டினத்தை சேர்ந்த 9 பேர் உள்பட 77 மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்து இலங்கை சிறையில் அடைத்தனர். கைதான மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.

இதன் அடிப்படையில் 77 மீனவர்களையும் இலங்கை அரசு விடுதலை செய்தது. விடுதலையான மீனவர்கள் நேற்று மாலை காரைக்கால் மார்க் துறைமுகத்துக்கு இந்திய கப்பற்படைக்கு சொந்தமான கப்பலில் அழைத்து வரப்பட்டனர்.

அவர்களை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், நாகை மாவட்ட கலெக்டர் பழனிசாமி ஆகியோர் வரவேற்றனர்.

விடுதலையான ராமநாதபுரத்தை சேர்ந்த மீனவர் முனியசாமி கண்ணீர் மல்க கூறியதாவது:-



கைது செய்யப்பட்ட எங்களை இலங்கை கடற்படையினர் கடுமையாக துன்புறுத்தினர். இலங்கை ஜெயிலில் எங்களுக்கு சரியான உணவு தரவில்லை. அதிகமாக நாங்கள் சித்ரவதை செய்யப்பட்டோம்.

இந்தநிலை யாருக்கும் ஏற்படக்கூடாது என்றார்.

விடுதலையான மற்ற மீனவர்கள் கூறும்போது, இலங்கை சிறையில் சிறிய அறையில் நாங்கள் அடைக்கப்பட்டிருந்தோம் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து தான் படுத்திருந்தோம். எங்கள் மீன்பிடி படகுகள், மீன்பிடி சாதனங்களையும் இலங்கை அரசு விடுவிக்கவில்லை. அவைகளை தந்தால்தான் நாங்கள் வாழமுடியும். அவைகளை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Similar News