செய்திகள்

தோழிவீட்டுக்கு சென்று வருவதாக கூறி சென்ற எஸ்.எஸ்.எல்.சி. மாணவி மாயம்

Published On 2017-03-13 10:28 GMT   |   Update On 2017-03-13 10:28 GMT
புதுவையில் தோழி வீட்டுக்கு சென்று வருவதாக கூறி சென்ற எஸ்.எஸ்.எல்.சி. மாணவி மாயமானார். இது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார்.

புதுச்சேரி:

புதுவை கோரிமேடு ஜீவானந்தபுரம் பாரதிவீதியை சேர்ந்தவர் அண்ணாமலை, இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களது மகள் ஜெயந்தி (வயது18). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாமலை இறந்து விட்டார். இதையடுத்து விஜயலட்சுமி புதுவை நேரு வீதியில் உள்ள ஒரு குளிர்பான கடையில் வேலைசெய்து குடும்பத்தை நடத்தி வந்தார்.

மேலும் மகள் ஜெயந்தியை தனியார் டூட்டோரியலில் சேர்த்து எஸ்.எஸ்.எல்.சி. படிக்க வைத்து வந்தார். தற்போது எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடந்து வரும் நிலையில் நேற்று முன்தினம் ஜெயந்தி நெல்லித்தோப்பில் உள்ள தோழி வீட்டுக்கு சென்று வருவதாக தனது தாயிடம் கூறி சென்றார்.

ஆனால் வெகுநேரமாகியும் ஜெயந்தி வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்து தோழி வீட்டுக்கு சென்று விசாரித்த போது அங்கு ஜெயந்தி வரவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து உறவினர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் ஜெயந்தி இல்லை.

இதையடுத்து தனது மகள் மாயமானது குறித்து விஜயலட்சுமி கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீஸ் ஏட்டு வெங்கடேசன் வழக்குபதிவு செய்து ஜெயந்தியை யாராவது கடத்தி சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News