புதிய பஸ் நிலையம் அருகே குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் மறியல்
புதுச்சேரி:
புதுவை புதிய பஸ் நிலையம் அருகே அய்யனார் நகர் ஆனந்த முத்து மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் கடந்த 10 நாட்களாக வீடுகளில் சரியாக குடிநீர் வருவதில்லை என கூறப்படுகிறது.
மேலும் ஒரு சில நேரங்களில் குறைந்த அளவில் வரும் குடி நீரும் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் பயன்படுத்த முடியாத நிலையில் மாசு கலந்து பழுப்பு நிறத்தில் வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.
இந்த நிலையில் பொதுப் பணித்துறை ஊழியர்கள் சிலர் அப்பகுதியில் இன்று காலை புதிய பைப் லைன் போட பள்ளம் தோண்டினர்.
ஏற்கனவே குடிநீர் சரிவர வராததால் ஆத்திரத்தில் இருந்து வந்த அப்பகுதி மக்கள் இதனை கண்டதும் மேலும் ஆவேசம் அடைந்தனர். அவர்கள் குடிநீர் வராததை கண்டித்தும், சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்ய கோரியும் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாசு கலந்து வந்த குடிநீரை பாத்திரத்தில் பிடித்து வந்து அவர்கள்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் உருளையன்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பேசி சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
அதனை ஏற்று பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.