செய்திகள்

புதுவை: கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி 2 பேர் பலி

Published On 2017-03-05 09:14 GMT   |   Update On 2017-03-05 09:14 GMT
புதுவையில் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
புதுச்சேரி:

வில்லியனூர் கணுவாப் பேட்டையை சேர்ந்தவர் கண்ணன். (வயது 24). முடி திருத்தும் தொழிலாளி. இவரும், அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவன் தனுஷ்குமார் (14) என்பவரும் நேற்று மாலை வீராம்பட்டினம் கடலில் குளித்து கொண்டு இருந்தனர்.

அதே போல் அரியாங் குப்பம் பாரதி நகரை சேர்ந்த மின்துறை ஊழியர் மெய்யழகன் என்பவரின் மகனான 9-ம் மாணவன் யோகேஸ்வரன் (14), தனது பள்ளி நண்பர்களான ராகுல் (14), சூரிய பிரகாஷ் (14), கமேஷ் (14) ஆகியோரும் கடலில் ஆனந்தமாக குளித்து கொண்டு இருந்தனர்.

அப்போது கடலில் எழுந்த ராட்சத அலையில் 6 பேரும் சிக்கிக் கொண்டனர். அவர்கள 6 பேரையும் கடல் அலை இழுத்து சென்றது. இதனை பார்த்ததும் கடற்கரையில் அமர்ந்திருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அலறினார்கள்.

உடனே அங்கிருந்த 10-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் இறங்கி அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதில் யோகேஸ்வரனை தவிர, மற்ற 5 பேரையும் மயங்கிய நிலையில் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால், கரையில் பரிசோதித்த போது கண்ணன் மூச்சு திணறி இறந்து இருப்பது தெரிய வந்தது.

மேலும் மாணவன் தனுஷ்குமார் மயக்க நிலையில் இருந்து மீளாததால் அவனை சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட மாணவன் யோகேஸ்வரனும் பலியாகி இருக்கலாம் என கருதப்படுகிறது. அவனது உடலை மீட்கும் பணியில் கடலோர காவல் படையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

Similar News