செய்திகள்

கிருமாம்பாக்கத்தில் கூலித்தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை

Published On 2017-03-03 11:41 GMT   |   Update On 2017-03-03 11:41 GMT
கட்டாயப்படுத்தி ஆஸ்பத்திரியில் சேர்க்க குடும்பத்தினர் முயன்றதால் கூலித்தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பாகூர்:

கிருமாம்பாக்கம் பேட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முன்னடியான் (வயது 47). கூலித்தொழிலாளி. மது குடிக்கும் பழக்கத்தினால் இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

இதையடுத்து முன்னடியானை சிகிச்சைக்காக அவரது குடும்பத்தினர் கோரிமேட்டில் மார்பக நோய் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு 2 நாட்கள் மட்டும் சிகிச்சை பெற்ற முன்னடியான் அங்கிருந்து யாரிடமும் சொல்லாமல் வீட்டுக்கு வந்து விட்டார்.

இதையடுத்து அவரது குடும்பத்தினர் ஆஸ்பத்திரிக்கு தகவல் தெரிவித்து விட்டு இன்று மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிப்பதாக ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் தெரிவித்தனர். ஆனால், ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற முன்னடியானுக்கு விருப்பம் இல்லை.

இதையடுத்து அவரை குடும்பத்தினர் சமாதானப்படுத்தி வந்தனர். நேற்று இரவு வீட்டில் தூங்கிய முன்னடியானை இன்று அதிகாலை 4 மணிக்கு பார்த்த போது அவரை காணாமல் குடும்பத்தினர் திடுக்கிட்டனர். பல இடங்களில் தேடியும் எங்கும் முன்னடியான் இல்லை.

இந்த நிலையில் அங்குள்ள சாராயக்கடை அருகே ஒரு மரத்தில் முன்னடியான் கயிற்றில் தூக்குபோட்டு பிணமாக தொங்கினார். அந்த வழியாக வயல் வேலைக்கு சென்றவர்கள் இதனை பார்த்து அவரது குடும்பத்தினரிடம் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது மகன் பாலாஜி கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News