செய்திகள்
அரியாங்குப்பத்தில் கார் மோதியதில் ஓய்வு பெற்ற பஞ்சாயத்து ஊழியர் பலி
அரியாங்குப்பத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் ஓய்வு பெற்ற கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் பலியானார்.
பாகூர்:
அரியாங்குப்பம் ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது61) இவர் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஊழியராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். சம்பவத்தன்று முருகேசன் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து புறப்பட்டு அரியாங்குப்பம் நோக்கி வந்து கொண்டு இருந்தார்.
அப்போது அரிசி ஆலை அருகே வந்தபோது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முருகேசன் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முருகேசன் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.