செய்திகள்

பெரியகாலாப்பட்டில் விவசாய கிணற்றில் அழுகிய நிலையில் வாலிபர் பிணம்: போலீஸ் விசாரணை

Published On 2017-03-01 11:09 GMT   |   Update On 2017-03-01 11:09 GMT
பெரிய காலாப்பட்டில் விவசாய கிணற்றில் உடல் அழுகிய நிலையில் வாலிபர் பிணம் மிதந்தது. அவர் அடித்து கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காலாப்பட்டு:

புதுவை பெரிய காலாப்பட்டில் வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் விவசாய கிணறு உள்ளது. இந்த கிணற்றில் இன்று காலை 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணம் மிதந்தது. உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. அவர் யார்- எந்த ஊர்? என்பது தெரியவில்லை.

இதுபற்றி வெங்கடேசனின் உறவினர் வேலு காலாப்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் இதுகுறித்து காலாப்பட்டு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இருந்து உடலை மீட்டனர். பின்னர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர் காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்குபதிவு செய்து பிணமாக கிடந்த வாலிபர் யார்? எந்த ஊர்? என்பது குறித்தும், அவரை யாரேனும் அடித்து கொலை செய்து உடலை கிணற்றில் வீசி சென்றார்களா? அல்லது அந்த வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News