செய்திகள்

பேரணாம்பட்டில் இளம்பெண்ணை ஏமாற்றி கடத்திய வாலிபர் கைது

Published On 2017-02-28 11:39 GMT   |   Update On 2017-02-28 11:39 GMT
பேரணாம்பட்டில் இளம்பெண்ணை ஏமாற்றி கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பேரணாம்பட்டு:

பேரணாம்பட்டு டவுன் காமராஜர் நகரை சேர்ந்தவர் அலமேலு. இவரது மகள் ரோஜா (வயது 17). இவர் கடந்த 18-ந் தேதி காலை வீட்டிலிருந்து புறப்பட்டு கடையில் பொருள் வாங்க சென்றார்.

அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் பெற்றோர் தேடினர். அப்போது ரோஜாவை பேரணாம்பட்டு அருகே உள்ள குண்டலப்பல்லி கிராமத்தை சேர்ந்த துரைராஜ் மகன் மூர்த்தி (25) ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றி கடத்தி சென்றது தெரிய வந்தது.

இது குறித்து பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் அலமேலு புகார் கொடுத்தார். புகாரின் பேரில் பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசவன் விசாரணை நடத்தினார்.

விசாரணையில் ரோஜாவை மூர்த்தி ஏமாற்றி கடத்தி சென்று தனது வீட்டில் தங்க வைத்திருப்பதும், அதற்கு மூர்த்தியின் தந்தை துரைராஜ், தாயார் ஜெயலலிதா ஆகியோர் உடந்தையாக இருப்பதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து மூர்த்தி, துரைராஜ், ஜெயலலிதா ஆகியோர் மீது போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்து ரோஜாவை தேடி வந்தனர். இந்த நிலையில் ரோஜா மீட்கப்பட்டார்.

மூர்த்தி தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று அவர் கைது செய்யப்பட்டார். மீட்கப்பட்ட ரோஜாவும், கைது செய்யப்பட்ட மூர்த்தி ஆகியோர் குடியாத்தம் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.

ரோஜா தனது பெற்றோருடன் செல்வதாக கூறியதால் அவர் பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டார். மூர்த்தி 15 நாள் காவலில் வைக்கப்பட்டார்.

தலைமறைவாக உள்ள மூர்த்தியின் தந்தை துரைராஜ், தாயார் ஜெயலலிதா ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Similar News