செய்திகள்

ஜெயலலிதா 69-வது பிறந்தநாள் அரசு, சிறப்பு மருத்துவ முகாம்: ஜெயக்குமார்-விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தனர்

Published On 2017-02-24 10:23 GMT   |   Update On 2017-02-24 10:23 GMT
ஜெயலலிதா 69-வது பிறந்தநாள் அரசு, தனியார்ஆஸ்பத்திரிகளில் சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர்கள் ஜெயக்குமார்-விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தனர்.

சென்னை:

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 69 வது பிறந்த நாளையொட்டி மக்கள் நல்வாழ்வுத்துறை, சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.

அரசு மருத்துவமனை மற்றும் முதலமைச்சரின் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளின் மூலம் 690 சிறப்பு மருத்துவ முகாம்களை தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 28-ந் தேதி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்முகாம்களில் பிறவி குறைபாடுகளுக்கான சிறப்பு பரிசோதனைகளுக்கும் மற்றும் புற்றுநோய் பரிசோதனைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். இதன் ஒரு அங்கமாக இன்று தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பழைய பாண்டியன் திரையரங்கம் (மகாராஜா) எனும் இடத்தில் சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இம்முகாமில் சென்னை மருத்துவ கல்லூரி, கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி, ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் இருந்து 50 மருத்துவர்களும் 20 செவிலியர்களும் கலந்து கொண்டு மருத்துவ சேவையை வழங்கினார்கள்.

இந்த மருத்துவ பரிசோதனையில் இருதயம், சிறுநீரகம், நரம்பியல், மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் நலம், காது, மூக்கு, தொண்டைப் பிரிவு, தோல், பல், கண் பரிசோதனை, அறுவை சிகிச்சை உட்பட அனைத்து மருத்துவ சேவைகளும் வழங்கப்படும்.

நிகழ்ச்சியில் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் பி. வெற்றிவேல், குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ. ராதா கிருஷ்ணன், மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயண பாபு, சென்னை மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் முரளிதரன், ஸ்டான்லி மருத்துவ கல்லூரி முதல்வர் (பொறுப்பு) டாக்டர் பொன்னம்பலம் நமச்சிவாயம், உட்பட மருத்துவ துறை சார்ந்த உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

Similar News