செய்திகள்

அரக்கோணத்தில் நிதி நிறுவன உரிமையாளருக்கு கத்திக்குத்து

Published On 2017-02-23 13:16 GMT   |   Update On 2017-02-23 13:16 GMT
அரக்கோணத்தில் பணம் கொடுக்க மறுத்த நிதி நிறுவன உரிமையாளரை கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்ற வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அரக்கோணம்:

அரக்கோணம் அருகே அம்பரி‌ஷபுரம் கிராமம், யாதவர் தெருவை சேர்ந்தவர் வெங்கடாசலம் என்கிற வெங்கடேசன் (வயது 50). நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று அரக்கோணம் மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளில் பணத்தை வசூல் செய்வதற்காக வெங்கடேசன் சென்றார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் வெங்கடேசனிடம் கடனுக்கு பணம் கேட்டு உள்ளார்.

வெங்கடேசன் பணம் கொடுக்க மறுத்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் மறைத்து வைத்திருந்த கத்தியால் வெங்கடேசனை குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். உடனே அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் வெங்கடேசனை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசினர் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News