செய்திகள்

தூத்துக்குடியில் வாலிபர் மர்ம மரணம்: போலீசார் விசாரணை

Published On 2017-02-21 14:15 GMT   |   Update On 2017-02-21 14:15 GMT
தூத்துக்குடியில் வாலிபர் ஒருவர் சாக்கடையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் பீங்கான் ஆபீஸ் என்ற அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தையொட்டி உள்ள சாக்கடையில் இன்று அதிகாலையில் சுமார் 35 வயது மதிக்கத் தக்க வாலிபர் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து வாலிபர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்பு உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சாக்கடைக்குள் இறந்து கிடந்த அந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை. அவரது மூக்கில் இருந்து ரத்தம் வழிந்திருந்தது. உடலில் சிராய்ப்பு காயங்கள் இருந்தன.

அந்த வாலிபர் சாக்கடையில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது யாரேனும் அடித்துக்கொலை செய்து விட்டு உடலை சாக்கடையில் வீசிச்சென்றார்களா? என்பது மர்மமாக உள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த வாலிபர் நடிகர் விஜய் படம் போடப்பட்டிருந்த டீ-சர்ட் அணிந்திருந்தார். ஆகவே அவர் விஜய் ரசிகரா? எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Similar News