செய்திகள்

பஸ் நிலையத்தில் தனியார் கம்பெனி மானேஜரிடம் லேப்-டாப் திருட்டு

Published On 2017-02-20 11:03 GMT   |   Update On 2017-02-20 11:03 GMT
புதுவை பஸ் நிலையத்தில் தனியார் கம்பெனி மானேஜரிடம் லேப்-டாப்பை மர்ம மனிதர்கள் திருடி சென்று விட்டனர்.

புதுச்சேரி:

புதுவை சாரம் சக்திநகரை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது30), இவர் அய்யங்குட்டிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் மானேஜராக பணி புரிந்து வருகிறார். இவர் கம்பெனி வி‌ஷயமாக சென்னைக்கு பஸ்சில் செல்வதற்காக புதுவை புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார்.

அங்குள்ள பயணிகள் இருக்கையில் தனது லேப்-டாப் பேக்கை வைத்துவிட்டு அருகில் உள்ள கடையில் தண்ணீர் பாட்டில் வாங்க சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்தபோது லேப்-டாப்பேக்கை காணாமல் திடுக்கிட்டார். அதனை யாரோ மர்ம மனிதர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இந்த லேப்-டாப்பின் மதிப்பு ரூ.30 ஆயிரமாகும்.

இதுகுறித்து ஜெயராஜ் உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News