செய்திகள்
ஊதிய உயர்வு கோரி தனியார் நிறுவன கதவை மூடி தொழிலாளர்கள் போராட்டம்
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தனியார் நிறுவன கதவை மூடி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேதராப்பட்டு:
ஊசுடு தொகுதி பத்துக்கண்ணு அருகே ராமநாதபுரம் பேட் பகுதியில் தனியார் தொழில் நிறுவனம் உள்ளது. இதில், ஏராளமான பெண்கள் உள்பட சுமார் 50 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
கடந்த 3 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்பட வில்லை என இந்த தொழிலாளர்கள் குற்றம் சாட்டி வந்தனர். மேலும், இ.எஸ்.ஐ., பி.எப். போன்றவற்றுக்கு செலுத்திய பணத்துக்கான ஆதாரங்களை கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதுபற்றி பலமுறை வலியுறுத்தியும் நிர்வாகத்தால் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் இன்று வேலையை புறக்கணித்தனர்.
மேலும், அந்த நிறுவன கதவை அடைத்து தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தங்களுடைய கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற கோரி கோஷமிட்டனர்.