செய்திகள்

காதலர் தினத்தையொட்டி கொடைக்கானலில் குவிந்த காதலர்கள்

Published On 2017-02-14 09:36 GMT   |   Update On 2017-02-14 09:36 GMT
காதலர் தினத்தையொட்டி இன்று கொடைக்கானலில் ஏராளமான காதல் ஜோடிகள் குவிந்தனர்.
கொடைக்கானல்:

மனிதகுலத்தின் மகத்தான காதலை போற்றும் வகையில் காதலர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இளம் காதலர்கள் மட்டுமல்ல காதல் தம்பதிகளும் இந்த கொண்டாட்டத்தில் உற்சாகமாக ஈடுபட்டு வருகின்றனர்.

காதலர்கள் மலர்கொத்துகள் கொடுத்தும், பரிசுபொருட்கள் அளித்தும் தங்கள் அன்பை பரிமாறிக்கொண்டனர்.

காதலர் தினத்தை இன்பமாக அனுபவிக்க சுற்றுலா தலமான கொடைக்கானலில் ஏராளமான இளஞ்ஜோடிகள் குவிந்துள்ளனர். தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் காதலர்கள் வந்துள்ளனர்.

கொடைக்கானலில் இன்று இதமான சூழல் நிலவுகிறது. அதிகாலை முதல் விட்டுவிட்டு லேசான சாரல்மழை பெய்து வருகிறது. அதில் நனைந்தவாறு காதலர்கள் இயற்கை அழகை கண்டு ரசித்தனர். பிரையண்ட் பூங்கா, பசுமை பள்ளத்தாக்கு, மோயர்பாயிண்ட், கோக்கர்ஸ் வாக், குணாகுகை, பில்லர் ராக் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று செல்பி எடுத்து கொண்டனர். ஏரியில் படகுசவாரி செய்தும் மகிழ்ந்தனர். சில ஜோடிகள் குதிரை சவாரி செய்து சுற்றி பார்த்தனர்.

காதலர் தினத்தையொட்டி கொடைக்கானலில் ரோஜாமலர் மற்றும் பூங்கொத்து விற்பனை அமோகமாக நடந்தது. பெரும்பாலான காதல் ஜோடிகள் கைகளில் ரோஜா மலர்களை வைத்துக்கொண்டு சுற்றி திரிந்தனர். புதிதாக திருமணம் ஆன தம்பதிகளும், வயதான ஜோடிகளும் வந்திருந்தனர்.

Similar News