செய்திகள்

பறவை காய்ச்சல் பலி குறித்து உரிய விசாரணை: சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் தகவல்

Published On 2017-01-30 10:10 GMT   |   Update On 2017-01-30 10:10 GMT
பறவை காய்ச்சல் பலி குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட்டு, விசாரணை அறிக்கை சட்டசபையில் சமர்ப்பிக்கப்படும் என்று சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
சென்னை:

சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் ஒரு பிரச்சினையை கிளப்பினார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பறவை காய்ச்சல் நோயால் 24 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாகவும், இதில் 4 பேர் இறந்து விட்டதாகவும் துரைமுருகன் தெரிவித்தார்.

இறந்தவர்களில் தி.மு. க.வை சேர்ந்த பிரமுகரின் மனைவி, மருமகளும் அடங்குவார்கள். இதுபற்றி அமைச்சருக்கு தகவல் வந்ததா? என்றும் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு அமைச்சர் கே.சி.வீரமணி பதில் அளிக்கையில், “இவர்கள் கேரளாவுக்கு சுற்றுப்பயணம் சென்றவர்கள். 25 பேர் கொண்ட குழுவாக சென்றிருந்தனர். அங்கு சென்று வந்த பிறகே நோய் அறிகுறி தெரிந்துள்ளது” என்றார்.

அப்போது தி.மு.க. - அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறுகையில், “இதுதொடர்பாக முழுமையாக விசாரணை நடத்தப்படும். அந்த விசாரணை அறிக்கை சட்டசபையில் சமர்ப்பிக்கப்படும்” என்றார்.

முன்னதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எழுந்து துரைமுருகனின் கேள்விக்கு பதில் அளிக்கும்போது கூறியதாவது:-

பன்றி காய்ச்சல் போன்ற தொற்று நோயைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தேவையான நடவடிக்கை எடுத்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் ஒருவருக்கு பறவை காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது.

இதேபோல புது குமுளிப்பூண்டியில் ஒருவருக்கும் பறவை காய்ச்சல் நோய் அறிகுறி தென்பட்டுள்ளது. இதனால் மருத்துவக் குழுவினர் அங்கு தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

நோய் இல்லாத அளவுக்கு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது.

இவ்வாறு அமைச்சர் விளக்கம் அளித்தார்.

Similar News