செய்திகள்

நரேந்திர மோடிக்கும், தேசிய கொடிக்கும் அவமதிப்பு: கமிஷனர் அலுவலகத்தில், பா.ஜ.க. புகார்

Published On 2017-01-28 22:20 GMT   |   Update On 2017-01-28 22:20 GMT
மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நரேந்திர மோடிக்கும், தேசிய கொடிக்கும் அவமதிப்பு ஏற்பட்டுள்ளதாக கமிஷனர் அலுவலகத்தில் பா.ஜா.க. வினர் புகார் அளித்துள்ளனர்.
சென்னை:

தமிழக பா.ஜ.க. இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

சென்னை மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நுழைந்த சில சமூக விரோதிகள் பிரதமர் நரேந்திர மோடி பதவிக்கும், நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதமாக அவருடைய படத்தை முக மூடியாக அணிந்து கொண்டு செருப்பு மாலை அணிந்து ஆபாசமான வார்த்தைகளால் கோஷம் போட்டனர்.

சர்வதேச பயங்கரவாதியான பின்லேடன் படத்தை முன்நிறுத்தி கோஷம் இட்டனர். தேசிய கொடியை தரையில் போட்டு காலால் மிதித்தல், தேசிய கொடியை எரித்தல், தேசிய கொடியை அவமதிக்கும் நோக்கத்துடன் தலைகீழாக பிடித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.

மேலும் இந்திய இறையாண்மைக்கு எதிராக கூட்டு சதி செய்யும் நோக்கத்தில் மக்களை தூண்டுதல் பிரிவினைவாத கோஷங்களை எழுப்புதல், மதவாத, இனவாத கலவரங்களை தூண்டுதல் போன்ற செயல்களிலும் ஈடுபட்டனர்.

மெரினா கடற்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களை இனம் கண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

புகார் மனுவுடன், வீடியோ ஆதாரத்தையும் அவர் வழங்கினார்.

Similar News