செய்திகள்

தஞ்சை அருகே கார் மோதி போலீஸ் ஏட்டு பலி

Published On 2017-01-21 09:50 GMT   |   Update On 2017-01-21 09:50 GMT
தஞ்சை அருகே கார் மோதி போலீஸ் ஏட்டு பலியானார். இதுகுறித்து தஞ்சை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள தொண்டராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமநாதன் (வயது40). போலீஸ் ஏட்டு. இவர் தஞ்சை ஆயுதப்படையில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவர் குடும்பத்துடன் தஞ்சை வ.உ.சி நகரில் உள்ள புதிய போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் ராமநாதன், தொண்டராம்பட்டுக்கு மோட்டார்சைக்கிளில் சென்று விட்டு நேற்று இரவு 9 மணி அளவில் தஞ்சைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். தஞ்சையை அடுத்த சூரக்கோட்டையில் உள்ள நடிகர் சிவாஜிகணேசனின் பண்ணைக்கு எதிர்புறம் வந்த கார் மோதியதில் ராமநாதன் பலத்த காயம் அடைந்தார்.

இதுகுறித்து அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் விநாயக மூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், ஏட்டுகள் ஜெகநாதன், சாமிநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் காயம் அடைந்த ராமநாதனை, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ராமநாதன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தஞ்சை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News