செய்திகள்

கோவை வழியாக லாரியில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 50 மாடுகள் சிறைபிடிப்பு

Published On 2017-01-21 09:42 GMT   |   Update On 2017-01-21 09:42 GMT
கோவை வழியாக லாரியில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 50 மாடுகளை போலீசார் சிறை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூலூர்:

கோவை வழியாக கேரளாவுக்கு அடிக்கடி லாரியில் மாடுகளை கடத்தி செல்லும் சம்பவம் நடந்து வருகிறது.இந்த நிலையில் இன்று காலை செட்டிப் பாளையம் அருகே உள்ள கஞ்சிப்பாளையம் பிரிவு வழியாக லாரியில் கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்ற 50 மாடுகளை பொது மக்கள் மற்றும் மாணவர்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த செட்டிபாளையம் போலீசார் மாடுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குறித்து மாணவர்கள் கூறியதாவது:-

நாங்கள் கடந்த 5 நாட்களாக மாடுகளை பாதுகாக்க ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகிறோம். இந்த வேலையில் தமிழகத்தில் இருந்து மாடுகளை கேரளாவுக்கு கடத்துவதை வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் லாரி உரிமையாளர்களுக்கு ஒரு கோரிக்கையை முன்வைக்கிறோம். நீங்கள் மாடுகள் கடத்தி செல்வதற்கு துணை போககூடாது என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Similar News