செய்திகள்

வறட்சியை பார்வையிட மத்திய குழு நாளை தமிழ்நாடு வருகை

Published On 2017-01-20 08:15 GMT   |   Update On 2017-01-20 08:15 GMT
வறட்சியை பார்வையிட மத்திய குழு நாளை தமிழ்நாடு வருகிறது. அக்குழு 24-ந்தேதிவரை ஆய்வு செய்கிறது.
சென்னை:

வடகிழக்கு பருவ மழை பொய்த்து விட்டதால் தமிழ்நாட்டில் வறட்சி நிலவுகிறது. கடும் குடிநீர் தட்டுப்பாடும் நிலவுகிறது. எனவே வறட்சி நிவாரண நிதி வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு மனு கொடுத்துள்ளது.

எனவே வறட்சியை பார்வையிட மத்திய அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. இக்குழுவில் 9 பேர் இடம் பெற்றுள்ளனர். மத்திய வேளாண் அமைச்சக இணை செயலாளர் வசுதா மிஸ்ரா இக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இக்குழு நாளை (21-ந்தேதி) தமிழ்நாடு வருகிறது. அவர்கள் சென்னையில் தலைமை செயலகத்தில் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்திக்கின்றனர்.

அவர்களிடம் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும், அமைச்சர்களும் வறட்சி நிலவரம் குறித்து விரிவாக விளக்குகின்றனர். பின்னர் வேளாண்மை, நீர் ஆதாரங்கள் மற்றும் கிராமப்புற வளர்ச்சி உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் 4 குழுக்களாக பிரிந்து நாள் ஒன்றுக்கு 4 முதல் 5 மாவட்டங்களை பார்வையிடுகின்றனர். இவர்கள் 24-ந்தேதிவரை ஆய்வு நடத்துகின்றனர்.

வறட்சியால் ஏற்பட்ட பயிர் சேதம் மற்றும் தண்ணீர் பிரச்சனையை ஆய்வு செய்கின்றனர். தமிழ்நாட்டில் உள்ள 16,682 கிராமங்களில் 13,305 கிராமங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே கணக்கிடப்பட்டுள்ளது. அவற்றில் 1564 கிராமங்கள் 87 சதவீதம் பகுதிகளில் 50 சதவீதத்துக்கும் மேல், வறட்சி பாதித்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக கடந்த 10-ந்தேதி அறிவிக்கப்பட்டது.

Similar News