செய்திகள்

தூத்துக்குடி: மீனவர் வீட்டில் ரூ.4 லட்சம் நகை-பணம் கொள்ளை

Published On 2017-01-19 13:33 GMT   |   Update On 2017-01-19 13:33 GMT
தூத்துக்குடியில் மீனவர் வீட்டில் பீரோவில் இருந்த ரூ.3 லட்சம் பணம் மற்றும் ரூ.1 லட்சம் மதிப்பிலான நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி செயின்ட் மேரீஸ் காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன். மீனவரான இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் நெல்லை மாவட்டம் சுரண்டையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார்.

நள்ளிரவில் ராஜேந்திரன் வீட்டு பின்பக்க கதவை உடைத்த மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த ரூ. 3 லட்சம் பணம் மற்றும் ரூ.1 லட்சம் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

நேற்று மாலை வீடு திரும்பிய ராஜேந்திரன் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த நகை-பணம் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தாளமுத்து நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Similar News