செய்திகள்

அடிக்கடி கனவில் வந்து இறந்த உறவினர் அழைப்பதாக கூறிய தொழிலாளி தற்கொலை

Published On 2017-01-17 12:26 GMT   |   Update On 2017-01-17 12:26 GMT
இறந்த உறவினர் அடிக்கடி கனவில் வந்து அழைப்பதாக கூறிய தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

சேதராப்பட்டு:

நெட்டப்பாக்கத்தை அடுத்த ஏரிப்பாக்கம் நத்தம்மேடு பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மகன் ஆறுமுகம் (வயது 26). கரும்பு வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி ரம்யா. இவர்களுக்கு லோகேஷ் என்ற மகனும், ரம்யா என்ற மகளும் உள்ளனர்.

கும்பகோணத்தில் வசித்து வந்த இவர்களுடைய உறவினர் ஒருவர் சமீபத்தில் இறந்து விட்டார். அவர் மீது மிகுந்த பாசத்தில் இருந்த ஆறுமுகம், இந்த தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்தார்.

அந்த உறவினரின் இறுதி சடங்கில் ஆறுமுகம் கலந்து கொண்டு விட்டு வீடு திரும்பினார். அதன்பின்னர், அந்த உறவினர் அடிக்கடி தனது கனவில் வந்து தன்னையும் அழைப்பதாக மனைவியிடம் கூறி புலம்பி வந்தார்.

அவருக்கு ரம்யா ஆறுதல் கூறியும், ஆறுமுகத்தின் புலம்பல் நிற்கவில்லை. இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் ஆறுமுகம் திடீரென தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். தீயை அணைத்து அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி ஆறுமுகம் பரிதாபமாக இறந்தார்.

நெட்டப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News