செய்திகள்

இலங்கை சிறையில் இருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் இன்று தாயகம் திரும்புகிறார்கள்

Published On 2017-01-09 20:22 GMT   |   Update On 2017-01-09 20:22 GMT
இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 51 பேர் இன்று (செவ்வாய்க்கிழமை) தாயகம் திரும்புகின்றனர்.
சென்னை:

இலங்கை எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தமிழக மீனவர்கள் 51 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்குமாறு தமிழக அரசு தரப்பில் இருந்து மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து மத்திய அரசு மீனவர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் பயனாக வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 51 பேரை இலங்கை அரசு நேற்று விடுதலை செய்தது. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.

விடுதலையான மீனவர்கள் 51 பேரையும் இலங்கை கடற்படையினர் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கின்றனர். பின்னர் தமிழக மீனவர்கள் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு இன்று மதியத்துக்குள் தாயகம் வந்தடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மீனவர்கள் தாயகம் திரும்புவதற்கான ஏற்பாடுகளை இந்திய தூதரக அதிகாரிகள் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்தநிலையில் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் கூறியதாவது:-

யாழ்ப்பாணம் சிறையில் கழிவறை சரியாக இல்லாததால் மனிதர்களே மனித கழிவுகளை அள்ளும் நிலை ஏற்பட்டது. இதனால் சிறையில் கடும் துயரத்தை சந்தித்தோம். எங்களை விடுதலை செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேபோல பறிமுதல் செய்யப்பட்ட எங்களுடைய படகுகளையும் விடுவிக்க வேண்டும்.

எங்களை விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுத்த மத்திய அரசுக்கும், முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். மீனவர் பிரச்சினையில் நிரந்தர தீர்வு காண இரு நாடுகளும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Similar News