சட்டப்பூர்வமாக அணுகி ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜெயந்தி நடராஜன் பேட்டி
சென்னை:
தி.மு.க செயல்தலைவராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினை பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் முன்னாள் மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜன், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கே. ஆர். ராமசாமி, எச்.வசந்தகுமார், ஓய்வு பெற்ற ஐ. ஏ.எஸ் அதிகாரி சிவகாமி, டைரக்டர் குகநாதன், தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன், பின்னணி பாடகி மாலதி ஆகியோர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.
பின்னர் ஜெயந்தி நடராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு. அதை நடத்த முடியாமல் போனதற்கு யார் காரணம் என்று ஆய்வு செய்ய வேண்டிய நேரம் இது அல்ல.
பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்காக மத்திய அரசு சரியான அணுகுமுறையை கையாண்டு சட்டப் பூர்வ நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஜெயந்தி நடராஜன் கூறினார்.