சுசீந்திரம் அருகே பார் ஊழியரை பீர் பாட்டிலால் குத்தி கொல்ல முயற்சி: 2 பேர் கைது
என்.ஜி.ஓ.காலனி:
கோட்டார் வயல் தெருவைச் சேர்ந்தவர் ராஜ் (வயது 45). இவர் நல்லூர் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் பார் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
நேற்று அந்த டாஸ்மாக் கடைக்கு சியோன்புரத்தை சேர்ந்த ஞானபிரின்ஸ் என்ற பாலு (27), வடசேரி நெசவாளர் காலனியை சேர்ந்த முத்துக்குமார் (26) ஆகியோர் மது குடிப்பதற்காக வந்தனர்.
ராஜ் அவர்களுக்கு தின் பண்டங்களை பரிமாறினார். பின்னர் இதற்கான தொகை ரூ.120 கேட்டுள்ளார். ஆனால் பாலு, முத்துக்குமார் ஆகியோர் நாங்கள் இந்த ஏரியாவில் பெரிய ஆட்கள் எங்களிடமே பணம் கேட்கிறாயா? என கேட்டு தகராறில் ஈடுபட்டனர். தகராறு முற்றவே ஆத்திரமடைந்த பாலு, முத்துக்குமார் ஆகியோர் பீர் பாட்டிலால் ராஜை குத்தி கொல்ல முயன்றனர்.
இதில் சுதாரித்துக் கொண்ட ராஜ் விலகினார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் அங்குள்ள சேர்களை அடித்து உடைத்து சேதப்படுத்தினார்கள்.
இதுகுறித்து சுசீந்திரம் போலீசில் ராஜ் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சாம்சன், சப்-இன்ஸ்பெக்டர் பொன் கீதா ஆகியோர் வழக்குப் பதிவு செய்து பாலு, முத்துக் குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பாலுவுக்கு சுசீந்திரம் போலீசில் கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு, அடிதடி வழக்கு, ஆனை மலையில் கொலை வழக்கு உள்பட பல வழக்குகள் உள்ளது.
முத்துக்குமாருக்கு கோட்டார் போலீஸ்நிலையத்தில் அடிதடி வழக்கு, கொலை முயற்சி வழக்கு, ஆனைமலையில் ஒரு கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அகஸ்தீஸ்வரம் காமராஜ் தெருவை சேர்ந்தவர் அருள் ராஜ் (30). தொழிலாளி.
சம்பவத்தன்று அவர் கீழ மணக்குடி சந்திப்பில் நின்றுகொண்டிருந்தார். அப்போது வெட்டூர்ணிமடம் நெசவாளர் காலனியை சேர்ந்த முத்துக்குமார் அங்கு வந்தார். அவர் அருள் ராஜிடம் செலவுக்கு பணம் கேட்டார். அவர் தன்னிடம் பணம் எதுவும் இல்லை என கூறினார்.
இதனால் அவரது சட்டைப் பையில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு அவரை சரமாரியாக தாக்கி மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டி கொல்ல முயன்றார். இதில் சுதாரித்துக்கொண்ட அருள்ராஜ் விலகினார்.
இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் அங்கு வந்தனர். அவர்கள் வருவதை பார்த்ததும் முத்துக்குமார் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதுகுறித்து தென்தாமரை குளம் போலீசில் அருள்ராஜ் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சரவணகுமார், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரை தேடி வந்தனர். இந்த நிலையில் சுசீந்திரத்தில் உள்ள பாரில் நடைபெற்ற தகராறில் போலீசார் அவரை கைது செய்தனர்.